குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ‘கன்னிப்பெண்கள்’ இறக்குமதி? தென் கொரியாவில் வெடித்தது சர்ச்சை!

உலகிலேயே மிகக்குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள தென் கொரியாவில், மக்கள் தொகையை உயர்த்த அந்நாட்டின் ஜின்டோ கவுண்டி தலைவர் கிம் ஹி-சூ முன்வைத்துள்ள வினோத யோசனை பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. வியட்நாம் அல்லது இலங்கையிலிருந்து ‘கன்னிப்பெண்களை’ இறக்குமதி செய்து, கிராமப்புறங்களில் உள்ள திருமணமாகாத இளைஞர்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்த விபரீத அறிவிப்பு சர்வதேச அளவில் கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக, சியோலில் உள்ள வியட்நாம் தூதரகம் இதற்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. பெண்களை வெறும் பண்டமாகச் சித்தரிக்கும் இத்தகைய கருத்து மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
நிலைமை மோசமானதை உணர்ந்த கிம் ஹி-சூ, தனது கருத்து ‘தவறானது’ என்று ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், மக்கள் தொகை வீழ்ச்சியைச் சமாளிக்க இவ்வளவு தரம் தாழ்ந்த யோசனையை ஒரு மக்கள் பிரதிநிதி முன்வைத்தது அந்நாட்டு அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.