கள்ளக்காதலுக்காக கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி, காதலன் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் அனூப்பூர் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்காக கணவனை கொடூரமாக கொலை செய்ததாகக் கூறப்படும் ஒரு பெண், அவரது காதலன் மற்றும் காதலனின் ஊழியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர் 60 வயதான பையா லால் ரஜக். அவரது மூன்றாவது மனைவி விமலா ரஜக் (38) மற்றும் உள்ளூர் வர்த்தகரான நாராயண் தாஸ் குஷ்வாஹா இடையே கள்ளக்காதல் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பையா லாலுக்கு இந்த விவகாரம் தெரியவந்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
போலீசாரின் கூற்றுப்படி, சம்பவம் நடந்த அன்று பையா லால் தூங்கிக் கொண்டிருந்தபோது, விமலாவின் அறிவுறுத்தலின் பேரில் நாராயண் மற்றும் அவரது ஊழியர் தீரஜ் கோல் ஆகியோர் பையா லாலின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி, பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை சாக்குமூட்டையில் கட்டி வீட்டின் பின்னால் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். மறுநாள், பையா லாலின் இரண்டாவது மனைவி கிணற்றில் உடலை கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில், விமலா குற்றத்தை ஒப்புக்கொண்டார். மூன்று குற்றவாளிகளும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர்.