கடும் குளிரில் பூத்துக் குலுங்கும் வசந்த கால பூக்கள் லக்கிம்பூர் கெரியில் ஆச்சரியத்தில் உறைந்த விஞ்ஞானிகள்

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் உள்ள கோந்த்வா கிராமத்தில் வழக்கத்திற்கு மாறாக டிசம்பர் மாத கடும் குளிரில் வில்வ மரத்தில் பூக்கள் பூத்துள்ளன. பொதுவாக வசந்த காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த மலர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே பூத்திருப்பது வேளாண் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கான்பூர் வேளாண் பல்கலைக்கழக நிபுணர்கள் இது குறித்து ஆய்வு செய்ய மலர் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
கடந்த 35 ஆண்டுகளில் இது போன்ற ஒரு நிகழ்வை கண்டதில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்றம் அல்லது மரபணு மாற்றங்கள் காரணமாக இந்த இயற்கை மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்து மத நம்பிக்கைகளின்படி வில்வ மரம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது என்பதால் இந்த அபூர்வ நிகழ்வை அப்பகுதி மக்கள் ஒரு மங்களகரமான அறிகுறியாக கருதுகின்றனர்.