ஒரே நாளில் மூன்று அணிகள் களமிறக்க முடியும் – ஸ்டார்க்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், இந்திய அணியின் ஆழத்தையும் திறமையையும் பாராட்டி, “இந்தியா ஒரே நாளில் மூன்று வெவ்வேறு அணிகளை களமிறக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
வரும் ஐபிஎல் சீசனில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் அவர் காயம் காரணமாக பங்கேற்க முடியவில்லை. ஆனால், இப்போது அவர் ஐபிஎல்லில் விளையாட மிகவும் ஆவலாக உள்ளார். இந்தியா வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டார்க், “இந்தியா ஒரே நேரத்தில் டெஸ்ட் அணியை ஆஸ்திரேலியாவில், ஒருநாள் அணியை தென் ஆப்பிரிக்காவில், மற்றும் டி-20 அணியை வேறு நாட்டில் விளையாடச் செய்யலாம், ஆனால், அவை மூன்றும் மிகப்பெரிய போட்டியை அளிக்கும்” என்று குறிப்பிட்டார்.
இந்த திறமைக்கு ஐபிஎல் காரணமா? என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால், “ஐபிஎல் உலகின் சிறந்த லீக், இந்தியாவின் மிகுந்த திறமையான வீரர்கள் இதில் விளையாடுகிறார்கள். இது இந்திய கிரிக்கெட்டின் ஆழத்தை அதிகரிக்கிறது” என அவர் கூறினார்.