எம்பிபிஎஸ் மாணவி மர்ம மரணம்: பாத்ரூமில் கண்ட காட்சி.. அதிர்ச்சியில் போபால்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள புகழ்பெற்ற காந்தி மருத்துவக் கல்லூரியில் (GMC) முதலாண்டு படித்து வந்த மாணவி ரோஷினி, தங்கியிருந்த விடுதி பாத்ரூமில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
அலிராஜ்பூரைச் சேர்ந்த ரோஷினி, கோஹேபிசா பகுதியில் உள்ள பிஜியில் தங்கிப் படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. தோழிகள் பலமுறை அழைத்தும் பதில் இல்லாததால், காவலாளி உதவியுடன் பாத்ரூம் கதவு உடைக்கப்பட்டது. உள்ளே ரோஷினி மயங்கிய நிலையில் கிடந்தார், அவர் அருகே காலியான ஆசிட் பாட்டில் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அவர் ஹமிதியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
கடந்த 2025 அக்டோபரில் தான் ரோஷினி மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். கடந்த வாரம் தான் ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும், மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கிருந்து கடிதம் ஏதும் சிக்கியதா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மாணவியின் மொபைல் போன் பதிவுகள் மற்றும் நண்பர்களிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.