உலகக்கோப்பையை வென்று கொடுத்த அந்த வரலாற்று தருணம் எப்போதும் ஸ்பெஷல் என ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சி

பிசிசிஐ நமன் விருதுகள் விழாவில் பங்கேற்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2025 உலகக்கோப்பை வெற்றி குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவை அரையிறுதியிலும், தென்னாப்பிரிக்காவை இறுதிப்போட்டியிலும் வீழ்த்தி இந்தியா படைத்த வரலாற்றுச் சாதனை பல ஆண்டு கால கனவு என்று அவர் குறிப்பிட்டார். ஷஃபாலி வர்மாவின் அதிரடி ஆட்டம் மற்றும் தீப்தி ஷர்மாவின் பந்துவீச்சு இந்த வெற்றிக்கு முக்கிய தூணாக அமைந்ததாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவின் கடைசி விக்கெட்டை வீழ்த்திய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கேட்ச் தனது கிரிக்கெட் பயணத்திலேயே மிக நெருக்கமான ஒன்று என ஹர்மன்ப்ரீத் கூறினார். அதே சமயம், 2025ல் ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனாவுக்குச் சிறந்த சர்வதேச வீராங்கனை விருது வழங்கப்பட்டது. உலகக்கோப்பையில் 434 ரன்கள் குவித்து அசத்திய மந்தனாவின் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு வலுசேர்த்தது.