உடல் மெலிந்த நிலையில் அண்ணா அறிவாலயம் வந்த துரைமுருகன்

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வில் இருந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் உடல் மெலிந்து காணப்பட்டார். காரில் இருந்து இறங்கிய அவரை பூச்சி முருகன் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் பொதுவெளியில் தோன்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சமீபத்திய சட்டமன்றக் கூட்டத்தொடர் மற்றும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் துரைமுருகன் பங்கேற்காதது பல்வேறு விவாதங்களை எழுப்பியது. செய்தியாளர்களைப் பார்த்து தனது பாணியில் நகைச்சுவையாகப் பேசினாலும் அவரின் உடல்நிலை தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலன் கருதி வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவாரா அல்லது புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.