ஈரான் – அமெரிக்கா மோதல்: பயங்கரவாதத்தை தூண்டும் அல்-கொய்தா!

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழலை சாதகமாகப் பயன்படுத்தி, மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடங்க அல்-கொய்தா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த ‘பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம்’ (Institute for Counter Terrorism) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பை ‘இஸ்லாத்திற்கு எதிரான போர்’ எனச் சித்தரிப்பதன் மூலம், தங்களின் சித்தாந்தத்தைப் பரப்பவும் ஆதரவாளர்களைத் தூண்டிவிடவும் அந்த அமைப்பு முயற்சிப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நிபுணர் மைக்கேல் பராக், அல்-கொய்தாவின் இந்த நடவடிக்கை ஒரு சந்தர்ப்பவாத உத்தி என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த அமைப்பின் ராணுவ பலம் குறைவாக இருந்தாலும், நிலவும் பதற்றத்தைப் பயன்படுத்தி ‘லோன் வுல்ஃப்’ (Lone Wolf) எனப்படும் தனிநபர் தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொள்கைகளை ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகச் சித்தரித்து, உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் தீவிரவாதத்தைப் பரப்ப இந்த அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.