இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை சிங்கங்கள் என புகழ்ந்து தள்ளிய ராகுல் காந்தி

டெல்லியில் நடைபெற்ற ஏஐ இம்பாக்ட் மாநாட்டில் சட்டையை கழற்றி போராட்டம் நடத்திய விவகாரத்தில், இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய்பானு சிப் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்று போபாலில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பேசினார். இந்த கைது நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை பப்பார் ஷேர் அல்லது சிங்கங்கள் என்று வர்ணித்த ராகுல், அவர்களின் தைரியத்தை வெகுவாக பாராட்டினார். நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பசுமைப் புரட்சியில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். தேசபக்தி கொண்ட இந்த இளைஞர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்றும், மோடி அரசு இவர்களின் குரலை ஒடுக்க நினைப்பதாகவும் ராகுல் காந்தி தனது உரையில் குற்றம் சாட்டினார்.