இம்ரான் கான் மனநலம் பாதிக்கப்பட்டவர்! தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என பாகிஸ்தான் ராணுவம் பகிரங்க தாக்கு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ தலைமைக்கு இடையேயான பகிரங்க மோதல் அந்நாட்டின் அரசியலில் மீண்டும் ஒரு கடுமையான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. சிறையில் உள்ள இம்ரான் ராணுவ தலைமைக்கு எதிராக சமீபத்தில் வெளியிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், டிஜி ஐஎஸ்பிஆர் லெப்டினன்ட் ஜெனரல் அஹமது ஷெரீஃப் சௌத்ரி அசாதாரண பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இம்ரானை ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்றும், ‘நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்றும் கடுமையாக சாடினார்.
இம்ரானின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில் இந்த மோதல் அதிகரித்துள்ளது. இம்ரான் கான் ராணுவத்திற்கு எதிராகவும், தேசிய அமைப்புகளுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்துக்களை கூறி வருவதாக ஜெனரல் சௌத்ரி குற்றம் சாட்டினார். மேலும், அவர் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவிக்கும்போது, இந்தியாவின் தாக்குதலின்போது இம்ரான் கான் ஆட்சியில் இருந்திருந்தால், அவர் ‘பிச்சைப் பாத்திரத்துடன் இந்தியாவுக்கு ஓடியிருப்பார்’ என்றார். இந்த கடுமையான விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் அரசியலில் ராணுவத்தின் தலையீடாகப் பார்க்கின்றன.