இபிஎஸ் பென்ஷன் உயர்வு இல்லை? முதியோர்களுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பு!

பொருட்களின் விலை விண்ணை முட்டும் இந்த காலத்தில், வெறும் 1000 ரூபாய் ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்த முடியுமா? பொதுமக்களின் இந்த நியாயமான கேள்விக்கு மத்திய அரசு தற்போது ஒரு கசப்பான பதிலை அளித்துள்ளது.
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7,500 ரூபாயாக உயர்த்துவது தற்போதைக்கு சாத்தியமில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், போதிய நிதி ஆதாரம் இல்லாததால் இந்த உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் தொகையை எதிர்பார்த்து காத்திருந்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் முதியோர்களின் கனவு தற்காலிகமாக கலைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஓய்வூதியத் தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில், இந்த சொற்பத் தொகையை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றனர். தங்களின் உழைப்பில் ஒரு பகுதியைச் சேமித்த பிறகும், முதுமையில் அதற்குரிய பாதுகாப்பு கிடைக்காதது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.