இந்திய கப்பல்களுக்கு அனுமதி கிடைக்குமா ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து கவலை தெரிவித்த மோடி, பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தினார். குறிப்பாக, இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற எரிபொருள் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. பதற்றமான சூழலிலும் புஷ்பக் மற்றும் பரிமள் ஆகிய இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக அந்தப் பகுதியை கடந்து சென்றுள்ளன. சர்வதேச விநியோகச் சங்கிலி மற்றும் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை உறுதி செய்ய புதுடெல்லி தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.