இந்தியா-பாகிஸ்தான் மோதலால் வங்கதேச கிரிக்கெட் பாதாளத்திற்கு தள்ளப்படுகிறதா?

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை புறக்கணிக்கும் வங்கதேச அரசின் முடிவு, தற்போது அந்த நாட்டு கிரிக்கெட்டிற்கே பெரும் வினையாக மாறியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது உறுதியான நிலையில், வங்கதேச அரசு திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
முன்னதாக இந்தியாவிற்குச் சென்று விளையாட அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, உலகக் கோப்பையில் விளையாடாதது கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்களின் தனிப்பட்ட முடிவு என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
அரசின் இந்த திடீர் பல்டியால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியிலும் குழப்பத்திலும் உள்ளனர். பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் இந்தச் செயலால் வங்கதேச கிரிக்கெட்டின் நற்பெயர் சர்வதேச அளவில் சிதைந்து வருகிறது. ஐசிசி இன்னும் எந்தத் தண்டனையும் அறிவிக்கவில்லை என்றாலும், உலகத்தரம் வாய்ந்த தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது வீரர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.