இண்டிகோ நெருக்கடி! 400 விமானங்களை ரத்து செய்ததால் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்வு

கேபின் க்ரூ மற்றும் செயல்பாட்டு சிக்கல்களால் இண்டிகோ நிறுவனம் நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்து கடும் பயணிகள் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. டெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ரத்து செய்யப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நெருக்கடியின் விளைவு பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர்குளோப் ஏவியேஷன் பங்குகள் 1.22% சரிந்து ரூ. 5,371.30 என்ற குறைந்த விலையை அடைந்துள்ளன.
இந்தச் சூழலில், போட்டியாளரான ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. வெள்ளிக்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில், ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 9% வரை உயர்ந்து அதிகபட்சமாக ரூ. 33-ஐ தொட்டன. நாள் முடிவில் 2.54% வளர்ச்சியுடன் ரூ. 31.11-ல் நிலைத்தது. இண்டிகோவின் பிரச்சினையால் முதலீட்டாளர்கள் ஸ்பைஸ்ஜெட் பங்குகளை அதிகளவில் வாங்கத் தொடங்கியதால், அதன் வர்த்தக அளவும் 1.03 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், விமானிகள் தொடர்பான புதிய கடமை நேர விதிகள் காரணமாக இண்டிகோ, DGCA-யிடம் செயல்பாட்டு நிவாரணம் கோரியுள்ளது.