ஆற்றில் காந்தம் வீசியபோது கிடைத்த லாக்கர்! தந்தை-மகன் செய்த காரியம்

இங்கிலாந்தின் லிங்கன்ஷையரில் உள்ள வித்தாம் ஆற்றில் தந்தை-மகன் இருவர், பொழுதுபோக்கிற்காக ஆற்றின் அடியில் உள்ள உலோகப் பொருட்களை காந்தத்தின் உதவியுடன் தேடி வந்தனர். அப்போது, 15 வயதான ஜார்ஜ் டிண்டால் மற்றும் அவரது தந்தை கெவின் டிண்டால் (52) ஆகியோருக்கு ஒரு கனமான லாக்கர் கிடைத்துள்ளது. அதைத் திறந்து பார்த்தபோது, உள்ளே சுமார் 1.5 லட்சம் ஆஸ்திரேலிய நாணயங்கள், ஒரு வங்கி அட்டை மற்றும் சில ஆவணங்கள் இருந்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
ஆவணங்களைக் கொண்டு லாக்கரின் உரிமையாளர் ராப் எவரெட் என்ற தொழிலதிபர் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். அவரது அலுவலகத்திலிருந்து 22 ஆண்டுகளுக்கு முன்பு இந்த லாக்கர் திருடுபோனது தெரியவந்தது. கிடைத்த பணத்தை வைத்துக்கொள்ளாமல், நேர்மையுடன் லாக்கரை உரியவரிடம் ஒப்படைத்தனர். இவர்களின் நேர்மையால் கவரப்பட்ட ராப், தனது செல்வ மேலாண்மை நிறுவனத்தில் அவர்களுக்கு வேலை வழங்கியுள்ளார்.