ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பக்தி பரவசத்துடன் களைகட்டும் ஸ்ரீராம நவமி திருவிழா

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஸ்ரீராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருமலை ஏழுமலையான் கோயிலில் சீதா லட்சுமண சமேத ஸ்ரீராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற உள்ள திருக்கல்யாண வைபவத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு மாநில அரசின் சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார்.
தெலங்கானாவிலும் அனைத்து ராமாயணக் கோயில்களில் விழா விமரிசையாக நடைபெறுகிறது. புகழ்பெற்ற பத்ராசலம் கோதண்டராமர் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தம்பதி சமேதராக பங்கேற்று சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். இரு மாநிலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் எங்கும் ராம நாமம் முழங்கி பக்தி மணம் கமழ்கிறது.