பறக்கும் ஆட்கொல்லிகளைத் தரையிலேயே முடக்கும்: இந்தியாவின் முதல் ‘இந்திரஜால் ரேஞ்சர்’ ராணுவ வாகனம்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘இந்திரஜால்’ (Indrajaal) என்ற பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம், நாட்டின் முதல் நடமாடும் ஆளில்லா விமான எதிர்ப்பு ரோந்து வாகனத்தை (ADPV) உருவாக்கியுள்ளது. இதற்கு ‘இந்திரஜால் ரேஞ்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அதிநவீன வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போதே எதிரி ட்ரோன்களைக் கண்டறியவும், தடுக்கவும், செயலிழக்கச் செய்யவும் முடியும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். பரிசோதனையின்போது, இது 6 நாட்களில் 40 ட்ரோன்களை தடுத்து நிறுத்தியதுடன், சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தலையும் தடுத்தது. எல்லைகள் முதல் முக்கிய நகரங்கள் வரை, நாட்டின் பாதுகாப்பிற்கு இந்த தொழில்நுட்பம் புதிய பலத்தைக் சேர்க்கும்.
இந்த AI-இயக்கப்படும் அமைப்பில், குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (GNSS) மற்றும் ரேடியோ அதிர்வெண் ஜாமிங் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கட்டளைப் பிரிவு தானாகவே ட்ரோன் அச்சுறுத்தலை பகுப்பாய்வு செய்து, அதை அழிப்பது அல்லது செயலிழக்கச் செய்வது குறித்து முடிவெடுக்கிறது. மற்ற அமைப்புகளைப் போல வாகனத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், ஓடும் நிலையிலேயே ரோந்து, கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இதன் திறன் தனித்துவமானது. முக்கியப் பகுதிகளில் ட்ரோன் அத்துமீறலைத் தடுக்கும் உலகத் தரமான தொழில்நுட்பம் இது என்று நிறுவனத்தின் CEO கிரண் பெனுமச்சா தெரிவித்துள்ளார்.