ஆசியக் கோப்பை: போல்ட் ஆன பிறகும் DRS கேட்ட வீரர்; அதிர்ச்சிக்குள்ளான கிரிக்கெட் ரசிகர்கள்

2025 ஆசியக் கோப்பை தொடரின் குரூப்-பி பிரிவில் நடந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் போல்ட் ஆன பிறகு, DRS கேட்க முயற்சி செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. நடுவர் சூழ்நிலையை விளக்கிய பிறகு, தனது தவறை உணர்ந்து ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு திரும்பினார். இந்த போட்டியில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. வங்காளதேசமும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், இந்த தோல்வியால் ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, முகமது நபி (60) ரன்களின் உதவியால், 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஆசியக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.