ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அதிரடி உத்தரவு அதிமுக எம்பி தம்பிதுரைக்கு சிக்கல்

அதிமுக மாநிலங்களவை எம்பி தம்பிதுரைக்குச் சொந்தமான செயின்ட் பீட்டர்ஸ் கல்வி நிறுவனம் அரசு நிலங்களையும் நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில் சுமார் 61.18 செண்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. கோனம்பேடு கிராம பொதுநலச் சங்கம் தொடர்ந்த இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை அடுத்த 12 வாரங்களுக்குள் மீட்க அதிகாரிகளுக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மீட்கப்படும் நிலங்களை அருகில் உள்ள அரசுப் பள்ளியின் வசதிகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தம்பிதுரை மீண்டும் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே நாளில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.