அருணாச்சல பழங்குடியினரின் வினோதமான பாரம்பரியம்! ஏன் பெண்கள் முகத்தில் டாட்டூ குத்தி, மூக்கில் பிளக் அணிகிறார்கள்?

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் வசிக்கும் அபதானி பழங்குடியினர் தங்கள் தனித்துவமான கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறார்கள். ஒரு காலத்தில், இந்தப் பழங்குடியினப் பெண்கள் தங்கள் அழகிலிருந்து தங்களைப் பாதுகாக்க முகத்தில் நீல டாட்டூக்களைக் குத்தியும், மூக்கில் பெரிய பிளக்குகளை அணிந்தும் வந்தனர். இந்த நடைமுறை, அண்டை பழங்குடியின ஆண்களால் கடத்தப்படுவதைத் தவிர்க்கத் தொடங்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த விசித்திரமான பழக்கம் அவர்களின் அழகைக் குறைத்து, கடத்தல்காரர்களின் ஆர்வத்தைக் குறைத்தது.
பிற்காலத்தில், இந்தப் பாரம்பரியம் வெறும் பாதுகாப்பின் அடையாளமாக இல்லாமல், பழங்குடியினப் பெண்களிடையே அழகு, வளம் மற்றும் பெருமையின் அடையாளமாகவும் கருதப்பட்டது. இருப்பினும், 1970களில், நவீனத்துவத்தின் தாக்கத்தால், பழங்குடியின இளைஞர்கள் இந்தப் பாரம்பரியத்தை ஒரு சுமையாக கருதத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து, அரசு மற்றும் பழங்குடி அமைப்புகளின் முயற்சியால் இந்தப் பழக்கம் படிப்படியாக முடிவுக்கு வந்தது.