“அமெரிக்கா எங்களை டாய்லெட் பேப்பர் போல பயன்படுத்தியது”: பாகிஸ்தான் அமைச்சர் காஜா ஆசிப் ஆவேசம்

பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் காஜா ஆசிப், அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அமெரிக்கா தனது சுயநலத்திற்காக பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டு, காரியம் முடிந்ததும் ‘டாய்லெட் பேப்பர்’ போல தூக்கி எறிந்துவிட்டதாக அவர் சாடினார்.
1980-களில் ரஷ்யாவிற்கு எதிராகவும், பின்னர் 2001-ல் ஆப்கானிஸ்தான் போரிலும் அமெரிக்காவின் நலனுக்காக பாகிஸ்தான் கைகோர்த்தது ஒரு மிகப்பெரிய தவறு என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் போர்களில் பங்கேற்றதால் பாகிஸ்தான் இன்றும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளையும், பெரும் பாதிப்புகளையும் சந்தித்து வருவதாக அவர் தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
முன்னாள் ராணுவ தளபதிகளான ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகியோர் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள, நாட்டையும் மக்களையும் மற்றவர்களின் போரில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தியதாக காஜா ஆசிப் விமர்சித்தார். அமெரிக்க ஆதரவைப் பெறுவதற்காகப் பாகிஸ்தான் தன்னைத்தானே இரத்தக் களரிக்கும் குழப்பத்திற்கும் தள்ளிக் கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.