அதிக தொகுதிகளில் வெற்றி தேடித்தரும் மாவட்ட செயலாளர்களுக்கே அமைச்சர் பதவி கிடைக்கும்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி நிபந்தனை விதித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்த மாவட்ட செயலாளர் அதிக தொகுதிகளைக் கைப்பற்றித் தருகிறாரோ, அவருக்கே அமைச்சர் பதவியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெறிவித்துள்ளார். இந்த முறை சீனியாரிட்டி என்பது இரண்டாம் பட்சம் தான் என்றும், களப்பணியில் காட்டும் வேகமே தகுதியாகக் கருதப்படும் என்றும் அவர் கட்சி நிர்வாகிகளிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஸ்டாலினே வேட்பாளர் என நினைத்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டுள்ள திமுக, கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை விரைவில் இறுதி செய்யவுள்ளது. நாளை முதல் வேட்பாளர் நேர்காணல் தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் பணிகளை முடுக்கிவிட மாவட்ட செயலாளர்களுக்கு சிறப்பு கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளையும் தாம் நேரடியாகக் கண்காணிப்பதாகவும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.