ரயில் விபத்துக் காப்பீடு ஆன்லைன் பயணிகளுக்கு மட்டுமா? உச்ச நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்வி

விபத்துக் காப்பீடு வசதி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே ஏன் வழங்கப்படுகிறது, ஆஃப்லைனில் டிக்கெட் வாங்குபவர்களுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை என்று இந்திய ரயில்வேயிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லாஹ் மற்றும் கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு இந்திய ரயில்வே தொடர்பான ஒரு வழக்கை விசாரித்தபோது இந்த தகவல் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
விபத்து காப்பீடு தொடர்பான இந்த வேறுபாட்டிற்கான காரணத்தைக் கேட்டு நீதிமன்றம் ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கில் ரயில்வேயின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி ஆஜரானார். ரயில்வே சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம், இந்த காப்பீடு விவகாரம் உட்பட இரண்டு முக்கிய அம்சங்கள் குறித்து அறிக்கை அல்லது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு ரயில்வேக்கு உத்தரவிட்டதுடன், அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.