வாட்ஸ்அப் vs ரஷ்யா: உங்கள் பிரைவசிக்கு ஆபத்தா? வருகிறது புதிய அரசு ஆப்!

உக்ரைன் போர் மற்றும் அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா தனது நாட்டு மக்கள் மீது ‘டிஜிட்டல் சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தத் திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவில் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியை முழுமையாக முடக்கிவிட்டு, அவர்களை அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள மெசேஜிங் தளங்களுக்கு மாற்ற கிரெம்ளின் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
ரஷ்ய அரசாங்கம் மக்களின் தனிப்பட்ட உரையாடல்களைக் கண்காணிக்கவும், பிரைவசியை சிதைக்கவும் முயற்சிப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
என்ன இந்த ‘MAX’ ஆப்?
வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ரஷ்யா தற்போது ‘MAX’ என்ற உள்நாட்டு செயலியை முன்னிறுத்தி வருகிறது. இந்தச் செயலி ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகளுக்கு மக்களின் உரையாடல்களை மிக எளிதாக இடைமறித்துக் கண்காணிக்க உதவும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், ரஷ்ய அரசு ஊடகங்களோ இது பாதுகாப்பான மற்றும் அதிநவீன அம்சம் கொண்ட மாற்று என்று விளம்பரம் செய்து வருகின்றன.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் பதிலடி
இது குறித்து வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பாதுகாப்பான தகவல் தொடர்பு சேவைகளைத் தடுப்பது ரஷ்ய குடிமக்களின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக முடியும்” எனத் தெரிவித்துள்ளார். இணையம் மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்பில் தனது முழுக் கட்டுப்பாட்டை நிலைநாட்டவே மாஸ்கோ நிர்வாகம் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் ரஷ்ய மக்கள் தங்களின் அடிப்படைத் தகவல் தொடர்பு உரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.