ரயிலுக்குள் பயணியை வெளியே தூக்கி எறிய மிரட்டல்; வீடியோ வைரலானதால் ரயில்வே அதிரடி நடவடிக்கை

இந்திய ரயில்வேயின் பொதுப் பெட்டிகளில் கூட்டம் வழக்கமான ஒன்றுதான், ஆனால், அந்த கூட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. ஒரு பயணியை ரயிலில் இருந்து வெளியே தூக்கி எறிந்து விடுவதாக மிரட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 12916 என்ற ரயில் எண் கொண்ட ரயிலில் பாண்டிகுய் சந்திப்பில் நடந்த இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட பயணி தானே பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். வீடியோ வைரலானதை அடுத்து, ரயில்வே நிர்வாகம் உடனே சுதாரித்து குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
இரு பயணிகளுக்கு இடையே இருக்கை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைக் காணொளி காட்டுகிறது. ஒருவர் தரையில் உட்கார மறுத்ததால், வாக்குவாதம் தொடங்கி, ஒருவரையொருவர் தூக்கி எறியும் அளவுக்கு மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர் அஞ்சாமல் இந்த முழு சம்பவத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.