மேற்கு வங்கத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நந்தினி சக்ரவர்த்திக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உள்துறைச் செயலாளரையும் மாற்றி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திங்கள்கிழமை மாலை 3 மணிக்குள் புதிய அதிகாரிகள் பொறுப்பேற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடியும் வரை மாற்றப்பட்ட அதிகாரிகளைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், இந்த அதிரடி மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.