மாசிமக திருவிழா நிறைவு: கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

கரூரில் உள்ள தென் திருப்பதி என போற்றப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் மாசிமக உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருத்தேரோட்டம் மற்றும் தெப்பத் திருவிழா ஆகியவை நடைபெற்று முடிந்த நிலையில், மாசிமக திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
நேற்று இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஆலய மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பட்டாச்சார்யார்கள் ஆலய வழிபாடு நடத்தி, சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து பஞ்ச கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு கல்யாண வெங்கட்ரமண பெருமாளின் சீராட்டிய அழகிய தரிசனத்தை கண்டு மகிழ்ந்தனர்.