பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு உளவுத்துறை எச்சரிக்கையால் அதிரடி நடவடிக்கை

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை பலப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அண்மைக்காலமாக அவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளன. இதன் அடிப்படையில், சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் (SSG) நேரடி கண்காணிப்பில் அவர் கொண்டு வரப்பட்டுள்ளார். இனிவரும் காலங்களில் மிக முக்கியமான உயரதிகாரிகள் மட்டுமே முதல்வரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெண் மருத்துவர் ஒருவர் ஹிஜாப் அணிந்தது தொடர்பான விவகாரத்தில் முதல்வர் நிதிஷ் குமார் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்தச் சூழலில் மாநிலத்தின் முக்கிய மற்றும் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உளவுத்துறையின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினால், முதல்வரின் பாதுகாப்பு வளையம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.