பிஎஸ்எல் 2026 பரிசுத் தொகை உயர்வு: புதிய சர்வதேச மைதானங்களை கட்டும் பிசிபி

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) சீசன் 11ஐ முன்னிட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பிஎஸ்எல் 11க்கான பரிசுத் தொகை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளருக்கு 14 கோடி பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 4.5 கோடி ரூபாய்) வழங்கப்படும், மேலும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2.70 கோடி ரூபாய் கிடைக்கும். அத்துடன், சிறந்த வளர்ச்சியை (Best Developing) வெளிப்படுத்தும் அணிக்கும் 1.80 கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்படும்.
பிஎஸ்எல்-ஐ உலகத் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் டி20 லீக்காக மாற்றுவதற்காக, சர்வதேச ஊடக உரிமைகளுக்கான (International Media Rights) டெண்டரை பிசிபி வெளியிட்டுள்ளது. மேலும், ஒரு புதிய OTT தளத்தையும் பிசிபி அறிமுகப்படுத்தியுள்ளது. முசாபராபாத் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் இரண்டு புதிய சர்வதேச மைதானங்களை அமைக்கும் திட்டத்தையும் வாரியம் அறிவித்துள்ளது. பிஎஸ்எல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மைதானங்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.