நாடாளுமன்றத்தில் இன்று அரசியல் சாசன தினம்! 9 மொழிகளில் டிஜிட்டல் ஆவணம் வெளியிடுகிறார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில், இன்று அரசியல் சாசன தினத்தையொட்டி நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் கோலாகலமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, துணைக் குடியரசுத் தலைவர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். 2015 ஆம் ஆண்டு முதல், அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26 அன்று இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மக்களவைத் தலைவர் உரையாற்றவுள்ளனர். மேலும், மத்திய சட்ட அமைச்சகத்தால் மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா மற்றும் அசாமி ஆகிய ஒன்பது மொழிகளில் தயாரிக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் டிஜிட்டல் பதிப்பை அவர் வெளியிடுகிறார். குடிமக்கள் ஆன்லைனில் முகவுரையைப் படிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.