டிரம்பின் புதிய 15 சதவீத வரி விதிப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா

அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்து நாடுகளுக்கும் புதிய சட்டப்பிரிவுகளின் கீழ் 15 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ளது இந்திய வர்த்தக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்தியாவுடன் 18 சதவீத வரி விதிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரி விகிதம் அமலுக்கு வருமா என்பதில் தெளிவற்ற சூழல் நிலவுகிறது. இருப்பினும், வர்த்தக ஒப்பந்தத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது என டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகம் இந்த வரி மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பிப்ரவரி 23 முதல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இரு நாட்டு அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாகி ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் பட்சத்தில், இந்திய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.