சென்னையில் குடிபோதையில் சொகுசு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தொழிலதிபர் மீது கொலை வழக்கு பதிவு

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் நிசாந்த், மது அருந்திவிட்டு அதிவேகமாக கார் ஓட்டி சாலிகிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கரின் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நிசாந்தை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர். மது போதையில் வாகனம் ஓட்டுவது ஒருவரின் உயிரைப் பறிக்கக்கூடும் என்று தெரிந்தே செய்த செயலாகக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இத்தகைய விபத்துகள் அலட்சியத்தால் ஏற்படும் மரணம் என்று கருதப்படும். ஆனால் தற்போது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 105-ன் கீழ், இது ‘கொலைக்குச் சமமான மரணம்’ என்று வகைப்படுத்தப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. குடிபோதை விபத்துகளைத் தடுக்க காவல்துறை எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.