சூப்பில் சிறுநீர் கலந்ததால் ரூ 2.5 கோடி அபராதம், சீன உணவகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சீனாவின் பிரபல ஹைடிலாவோ உணவக சங்கிலியில் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கலக்க முயன்ற இரண்டு இளைஞர்களுக்கு பெரும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஷாங்காயில் உள்ள கிளையில் நடந்த இந்த சம்பவம், வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கலக்கப்பட்ட சூப்பை எந்த வாடிக்கையாளரும் அருந்தவில்லை என உணவகம் தெரிவித்தாலும், உணவகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 17 வயதுடைய இரண்டு இளைஞர்களும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, ₹2.56 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக உணவகம் உறுதி அளித்துள்ளது. பிப்ரவரி 24 முதல் மார்ச் 8 வரை ஆர்டர் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முழு பணமும் திருப்பித் தரப்படும் அல்லது இழப்பீடு வழங்கப்படும். இந்த சம்பவத்திற்குப் பிறகு, உணவகத்தின் அனைத்து பாத்திரங்களும் மாற்றப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்காக உணவகம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.