சீனாவின் ‘ராடார் லாக்’ சாகசம் ஜப்பான் கடும் கண்டனம்!

இந்தியாவின் நட்பு நாடான ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே ராணுவ மோதல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், சீனாவின் லியானிங் விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட ஒரு இராணுவ விமானம், ஜப்பானின் ஒகினாவா அருகே ஜப்பானிய போர் விமானத்தின் மீது ‘ராடார் லாக்’ செய்தது. இதற்கு டோக்கியோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘ராடார் லாக்’ என்பது ஒரு இலக்கைத் தாக்குவதற்கு அதன் நிலை, வேகம் மற்றும் திசையை நிர்ணயிக்கும் ஒரு இராணுவ உத்தியாகும். ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம், சீன J-15 போர் விமானம் ஜப்பானிய F-15 போர் விமானத்தின் மீது இரண்டு தவணைகளில் மொத்தம் 33 நிமிடங்களுக்கு இந்த ஆபத்தான யுக்தியைப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது.
ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, சீனாவின் இந்த நடவடிக்கையை ‘ஆபத்தான செயல்’ என்று கண்டித்துள்ளார். இத்தகைய சம்பவங்களைத் தடுக்க சீனா கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜப்பான் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், பெய்ஜிங் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, இது ஒரு சாதாரண பயிற்சி என்று கூறியுள்ளது. இதற்கிடையில், இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் குவாட் அமைப்பில் உள்ள ஆஸ்திரேலியா, இந்த சம்பவத்தில் ஜப்பானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது, இது பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.