சிலிண்டர் தட்டுப்பாடு என்பது முதலமைச்சர் சொல்லும் பொய் என நயினார் நாகேந்திரன் விளாசல்

இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஈரானிய போர் பதற்றத்தால் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான இருப்பு உள்ளதாக அவர் உறுதிபடக் கூறினார். தாமே ஒரு சிலிண்டர் டீலர் என்பதால், தட்டுப்பாடு குறித்து பரப்பப்படும் செய்திகள் வெறும் வதந்திகளே என அவர் குறிப்பிட்டார்.
வணிக ரீதியிலான சிலிண்டர் தட்டுப்பாட்டினால் உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார்களை அவர் மறுத்துள்ளார். எதிர்க்கட்சியினரே இத்தகைய தேவையற்ற அச்சத்தை மக்களிடையே உருவாக்குவதாக அவர் குற்றம் சாட்டினார். உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் விலை கட்டுக்குள் இருப்பதாகவும், தட்டுப்பாடு ஏற்பட்டால் தாமே சிலிண்டர் வாங்கித் தரத் தயார் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.