சிறையில் இம்ரான் கான்: ஒரு கண்ணில் பார்வையை இழந்தாரா? பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள், அந்நாட்டு அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளன. சிறைவாசம் அனுபவித்து வரும் இம்ரான் கான், தனது வலது கண்ணில் சுமார் 85 சதவீத பார்வைத்திறனை இழந்துவிட்டதாகக் கூறப்படும் புகார்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நாட்டின் ஒரு காலத்து உச்சபட்ச தலைவராக இருந்த ஒருவருக்கு, சிறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இத்தகைய மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது, நிர்வாகத்தின் பொறுப்புணார்வு குறித்து பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அவருக்கு உரிய நேரத்தில் முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், ஏற்கனவே கொந்தளிப்பான நிலையில் இருக்கும் பாகிஸ்தான் அரசியல் சூழல் மேலும் மோசமடையும் என மக்கள் அஞ்சுகின்றனர்.
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட அந்நாட்டு உச்சநீதிமன்றம், வரும் பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் சிறப்பு மருத்துவர் குழுவைக் கொண்டு இம்ரான் கானுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறை எனும் இரும்புத் திரைக்குப் பின்னால் ஒரு கைதியின் அடிப்படை மருத்துவ உரிமைகள் மீறப்படுவது நீதித்துறையை கவலையடையச் செய்துள்ளது.
இந்தச் சம்பவம் வெறும் ஒரு அரசியல் தலைவரின் தனிப்பட்ட போராட்டமாக மட்டுமன்றி, அரசின் பாதுகாப்பில் இருக்கும் எந்தவொரு நபரின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் குறித்த விவாதத்தையும் மக்கள் மத்தியில் மீண்டும் முன்னெடுத்துள்ளது.