கேரள லாட்டரி பெயரில் ஆன்லைனில் நடக்கும் நூதன மோசடியால் அதிர்ச்சி தரும் தகவல் வெளியீடு

கேரள லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போலவே போலி முகவரியை உருவாக்கி ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யும் மோசடி கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். கேரளாவில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்கத் தடை உள்ள நிலையில், போலி இணையதளம் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. வெளிமாநிலத்தவர் பரிசு வென்றால் நேரில் வந்து டிக்கெட் வாங்கியதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திருவனந்தபுரம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி கும்பல் அரசு சின்னங்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி மக்களை நம்ப வைப்பதாகப் போலீசார் எச்சரித்துள்ளனர். லாட்டரி பிரியர்கள் இதுபோன்ற போலி இணையதளங்களை நம்பிப் பணத்தை இழக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.