குழாய் வழி எரிவாயு இணைப்பு இருந்தால் இனி எல்பிஜி சிலிண்டர் கிடைக்காது என மத்திய அரசு அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை சீர்செய்ய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் குழாய் வழி சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள வீடுகளுக்கு இனி எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட மாட்டாது. எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்தவும் ஒரே நேரத்தில் இரண்டு வசதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி குழாய் இணைப்பு உள்ளவர்கள் உடனடியாக தங்களின் சிலிண்டர் இணைப்பை ஒப்படைக்க வேண்டும். பொதுத்துறை எரிபொருள் நிறுவனங்கள் அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. எரிவாயு வீணாவதைத் தடுத்து உண்மையான தேவை உள்ளவர்களுக்கு சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இந்த மாற்றத்தின் மூலம் எரிபொருள் விநியோகத்தில் கூடுதல் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.