குற்றவாளிகளுக்கு ஆப்பு பிளாக் செய்யப்பட்ட மொபைல்களை பயன்படுத்த முடியாது மத்திய அரசு அதிரடி

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் குற்றங்களைத் தடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஐஎம்இஐ (IMEI) எண் கொண்ட ஒரு பிரத்யேக தரவுத்தளத்தை (டேட்டாபேஸ்) உருவாக்கி வருகிறது. சைபர் மோசடியாளர்கள் உட்பட குற்றவாளிகள், பிளாக் செய்யப்பட்ட மொபைல் ஃபோன்களின் மென்பொருளை மாற்றி 15 இலக்க ஐஎம்இஐ எண்ணை மாற்றி மீண்டும் பயன்படுத்துவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசிகளைத் தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைத்து மீண்டும் பயன்படுத்துவது நிரந்தரமாகத் தடுக்கப்படும். இதனால், குற்றங்களை விரைவாகக் கண்டறியவும், குற்றவாளிகளைக் கண்டறிந்து ஃபோன்களை நிரந்தரமாகப் பயனற்றதாக மாற்றவும் காவல்துறைக்கு எளிதாகும்.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிதி மற்றும் சைபர் மோசடிகளைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட அல்லது புதிதாக தயாரிக்கப்பட்ட அனைத்து மொபைல்களின் ஐஎம்இஐ தரவுகளும் இந்த போர்ட்டலில் வைக்கப்படும். நாட்டின் பல்வேறு மாநில காவல்துறையினர் இந்தத் தரவுத்தளத்தைப் பயன்படுத்தி விசாரணையில் உதவி பெற முடியும். பழைய ஐஎம்இஐ எண்களை மீண்டும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயன்படுத்திய (Second-Hand) ஃபோன்களை வாங்குவதற்கு முன், அவற்றின் ஐஎம்இஐ நிலையை அரசு போர்ட்டலில் சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.