காதலித்து கரம் பிடித்த மனைவியை கருக்கலைப்பு செய்து வரதட்சணைக்காக வீட்டை விட்டு துரத்திய கணவன்

செய்தி பிரிவு : உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரைச் சேர்ந்த பெண் ஒருவர், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மும்பையில் குடியேறிய நிலையில், அந்தப் பெண் கர்ப்பமானார். அப்போது கணவனும் அவரது மைத்துனரும் சேர்ந்து சதி செய்து, அந்தப் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்த அந்தப் பெண்ணை கணவன் கொடூரமாக தாக்கியதோடு, 3 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்துள்ளார்.
தொடர் துன்புறுத்தலுக்கு உள்ளான அந்தப் பெண், மீண்டும் கர்ப்பமடைந்த நிலையிலும் அவரது வருமானம் முழுவதையும் கணவன் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி குடிபோதையில் வந்த கணவன், வரதட்சணை கேட்டு அந்தப் பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றினார். தற்போது காஜிபூர் திரும்பிய அந்தப் பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.