கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய அதிரடி திட்டம்

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மொபைல் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருகிறது. மாணவர்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து முதல்வர் சித்தராமையா கவலை தெரிவித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் தூக்கமின்மை காரணமாக மாணவர்களின் கல்வி மற்றும் சமூக நடத்தையில் பின்னடைவு ஏற்படுவதாக அரசு கருதுகிறது.
இது குறித்து கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை அரசு கோரியுள்ளது. கல்வியின் அவசியத்தை கருத்தில் கொண்டு, முழுமையான தடையை விட கட்டுப்பாடுகளுடன் கூடிய கொள்கையை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் புதிய சட்டத்தைத் தொடர்ந்து, இந்தியாவிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. விரைவில் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.