எரிவாயு தட்டுப்பாட்டால் மருந்து உற்பத்தி பாதிப்பு மற்றும் பாராசிட்டமால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எரிவாயு மற்றும் பெட்ரோகெமிக்கல் விநியோகம் பாதிக்கப்பட்டு இந்திய மருந்துத் துறை நெருக்கடியைச் சந்தித்துள்ளது. எல்பிஜி மற்றும் பிஎன்ஜி தட்டுப்பாட்டால் பாராசிட்டமால் போன்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சிரிஞ்ச் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள் பற்றாக்குறையால் அடுத்த சில நாட்களில் சுமார் 200 தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளன.
மருந்து உற்பத்தியை அத்தியாவசிய சேவையாக அறிவித்து தடையில்லா எரிவாயு வழங்க உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிறிய நிறுவனங்களிடம் குறைந்த கால அளவிற்கே இருப்பு உள்ளதால் தட்டுப்பாட்டைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டால் 14 வகையான முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விநியோகம் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.