ஊறுகாயில் பூஞ்சை பிடிக்கிறதா? நீண்ட நாள் கெடாமல் இருக்க இதோ எளிய டிப்ஸ்!

சுவையான ஊறுகாய் தயாரிப்பதன் ரகசியம் சரியான மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதிலும், சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தான் உள்ளது. ஊறுகாய் வீணாகாமல் இருக்க எப்போதும் புதிய மற்றும் தழும்புகள் இல்லாத காய்கறிகளையே பயன்படுத்த வேண்டும். ஈரப்பதம் பூஞ்சை பிடிக்க முக்கிய காரணம் என்பதால், ஊறுகாய் ஜாடியைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதை நன்றாகக் கொதிக்க வைத்த நீரில் கழுவி, வெயிலில் உலர்த்தி ஈரம் இல்லாமல் வைத்திருப்பது அவசியம்.
மேலும், ஊறுகாயில் எண்ணெய் மற்றும் வினிகரை சரியான அளவில் சேர்த்தால், அதன் சுவையும் தரமும் நீண்ட காலம் மாறாமல் இருக்கும். பலர் ஊறுகாய் செய்த உடனே பயன்படுத்த விரும்புவார்கள்; இது மசாலாவின் முழுமையான சுவை ஊறுகாயில் இறங்குவதைத் தடுக்கும். எனவே, மசாலாக்களுடன் ஊறுகாய் நன்றாக ஊறுவதற்குப் போதிய அவகாசம் கொடுங்கள். சரியான சேமிப்பு முறையும் பொறுமையும் இருந்தால், உங்கள் கைவண்ணத்தில் உருவான ஊறுகாய் பல மாதங்கள் கெடாமல் அப்படியே இருக்கும்.