உலகின் இரண்டாவது மிகக் குளிரான குடியிருப்பு இந்தியாவில்! அது எங்கே என்று தெரியுமா?

லடாக் பகுதியின் கார்கில் மாவட்டத்தில் உள்ள டிராஸ் கிராமம், உலகின் இரண்டாவது மிகக் குளிரான குடியிருப்புப் பகுதியாக அறியப்படுகிறது. சுமார் 10,800 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த தொலைதூர இடம், ‘லடாக்கின் நுழைவாயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. சைபீரியாவின் ஓமியாகோனுக்குப் பிறகு டிராஸ் இந்த இடத்தில் உள்ளது. குளிர்காலத்தில் இங்கு வெப்பநிலை -20 டிகிரி செல்சியஸுக்கும் கீழே சென்று, கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகிறது. ஜனவரி 1995 இல், டிராஸில் பதிவுசெய்யப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலை -60 டிகிரி செல்சியஸைத் தொட்டது. இந்த தீவிர வானிலை இருந்தபோதிலும், டார்டிக் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 22,000 மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான குளிர்காலம் வாழ்க்கைச் சவால்களைக் கொடுத்தாலும், இங்குள்ள மக்கள் இந்த சவால்களைச் சமாளிப்பதில் திறமையானவர்கள். தடிமனான கற்களால் கட்டப்பட்ட வீடுகளில் விறகு அடுப்புகளின் வெப்பம் மற்றும் பல அடுக்குப் ஆடைகளை அணிந்து கடுமையான குளிரை அவர்கள் சமாளிக்கின்றனர். இதன் கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் பனியால் மூடப்பட்ட அழகான காட்சிகளால் டிராஸ் மலையேற்றப் பிரியர்களுக்கு ஒரு கவர்ச்சியான இடமாகும். ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலை (NH 1) இல் உள்ள சோஜிலா கணவாய் மற்றும் கார்கில் நகரத்திற்கு இடையே அமைந்துள்ள இந்த கிராமம், பயணிகளுக்கு ஒரு முக்கியமான நிறுத்தமாகவும் செயல்படுகிறது.