உயிரைக் குடிக்கும் ‘மூளை உண்ணும் அமீபா’ தாக்கம்: நோயின் அறிகுறிகள் மற்றும் பரவும் விதம் என்ன?

கேரளாவில் சமீப காலமாக ‘மூளை உண்ணும் அமீபா’ என அறியப்படும் நெக்லேரியா ஃபோவ்லெரி (Naegleria fowleri) நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) கொச்சி கிளையின் அறிவியல் குழு தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன், இது தொற்றால் பரவும் நோய் அல்ல என்றும், இதற்கு பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபலைடிஸ் (PAM) என பெயர் என்றும் விளக்கமளித்தார். இந்த அமீபா சூடான நன்னீர்நிலைகளான ஏரிகள், ஆறுகள் மற்றும் சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் காணப்படுகிறது.
சுகாதார அதிகாரிகளின்படி, இந்த ஒட்டுண்ணி மூக்கில் வழியாக மூளைக்குள் நுழைந்தால், அது கடுமையான வீக்கம் மற்றும் திசுக்களின் அழிவை ஏற்படுத்துகிறது, இது பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், தலைவலி, குமட்டல் மற்றும் கழுத்து விறைப்பு ஆகியவை இதன் ஆரம்ப அறிகுறிகளாகும், இது விரைவிலேயே வலிப்பு மற்றும் கோமாவிற்கு வழிவகுக்கும். இந்த நோய் பெரும்பாலும் பாக்டீரியா மெனிஞ்சைடிஸ் என தவறாக கண்டறியப்படுகிறது, இதனால் சரியான சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.