இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்திகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. நாட்டில் அடுத்த 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் உறுதிப்படத் தெரிவித்துள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளிலிருந்து தடையின்றி எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதால் மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளால் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்த நிலையில், நிலைமையை சீராக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கத்தாரிலிருந்து பெரும் அளவிலான சமையல் எரிவாயு மங்களூரு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளதால் விநியோகத்தில் சிக்கல் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இருப்பு மற்றும் சீரான விநியோகத்தை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.