இண்டிகோ சிஇஓவின் திடீர் அறிவிப்பு! பங்குச் சந்தையில் ராக்கெட் வேகத்தில் உயருமா?

நாட்டின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இண்டிகோ, ஞாயிற்றுக்கிழமை சுமார் 1,650 விமானங்களை இயக்கியதன் மூலம், நிறுவனம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகத் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட பயணிகளின் கடுமையான சிரமத்திற்குப் பிறகு, தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பீட்டர் எல்பெர்ஸ் இந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்தினார். சனிக்கிழமை சுமார் 1,500 விமானங்களும், வெள்ளிக்கிழமை 700க்கும் மேற்பட்ட விமானங்களும் இயக்கப்பட்ட நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஒரு உள் வீடியோ செய்தியில், ஞாயிற்றுக்கிழமை விமானம் சரியான நேரத்தில் செயல்படுவது (OTP) சுமார் 75% இருக்கும் என்று சிஇஓ கூறினார். பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், தற்போது ஆரம்ப நிலையிலேயே விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, கடந்த வாரம் 9% சரிந்திருந்த நிறுவனத்தின் பங்கு விலையில் திங்கள்கிழமை உயர்வு காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.