ஆர்எஸ்எஸ் தலைவருடன் விருந்து: விமர்சனங்களுக்கு அத்னான் சாமி அதிரடி பதில்!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் இரவு விருந்தில் பங்கேற்றதற்காக பாடகர் அத்னான் சாமி மீது காங்கிரஸ் மற்றும் சிவசேனா (யுபிடி) கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அத்னான் சாமியின் தந்தை பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியதைக் குறிப்பிட்டு, ஆர்எஸ்எஸ்-ஸின் கொள்கை குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அத்னான் சாமி, தான் தற்போது சட்டபூர்வமான இந்திய குடிமகன் என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார். “1947-ல் நடந்த தேசப்பிரிவினைக்கு இன்றைய காங்கிரஸ் தலைமை பொறுப்பல்ல என்றால், எனது கடந்த காலத்திற்காக என்னை ஏன் குறிவைக்கிறீர்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தான் எந்த அரசியல் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் அல்ல, அன்பை மட்டுமே நம்பும் ஒரு கலைஞன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வீணாக அரசியல் செய்யாமல் நல்லிணக்கத்துடன் செயல்படுமாறு விமர்சகர்களுக்கு அறிவுறுத்திய அவர், சஞ்சய் ராவத் போன்ற தலைவர்களையும் கடுமையாகச் சாடினார். இறுதியில் ‘ஜெய் ஹிந்த்’ மற்றும் ‘ஜெய் மகாராஷ்டிரா’ முழக்கங்களுடன் தனது நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.