ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் காந்தகர் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் நள்ளிரவில் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட நான்கு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் சபீபுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். குறிப்பாக காந்தகர் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் எரிபொருள் கிடங்குகள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு ஆப்கான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. எல்லையோர மாகாணங்களான பாக்தியா மற்றும் பாக்திகாவிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பயங்கரவாத குழுக்களை மட்டுமே தாக்குவதாக பாகிஸ்தான் கூறினாலும், அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.