அஜ்மீர் தர்காவில் பிரதமர் மோடியின் போர்வைக்கு தடையா? உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு

அஜ்மீர் கவாஜா மொய்னுதீன் சிஷ்டி தர்காவில் பிரதமர் அலுவலகம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் புனிதப் போர்வையை (சாதர்) சமர்ப்பிக்க தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. விஸ்வ வேத சனாதன சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு நிராகரித்தது. இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 26 அல்லது 29 ஆம் தேதி நடைபெறலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பிரதமர் மோடி சார்பில் தர்காவில் போர்வையை சமர்ப்பிக்க உள்ளார். இது குறித்து பேசிய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் மக்களின் நலனுக்காகவும் இந்த வேண்டுதல் நடத்தப்படுவதாகக் கூறினார். நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்காத நிலையில், திட்டமிட்டபடி தர்காவில் போர்வை சமர்ப்பிக்கும் சடங்குகள் நடைபெறும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.